வவுனியாவில் அதிகளவான விண்ணப்பங்கள்



வவுனியாவில் அதிகளவான விண்ணப்பங்கள்


அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு இலங்கையில் வவுனியா மாவட்டத்திருந்தே அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை  98.08 விகிதமாக காணப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் இடைநிலை , பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2500.00 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு, பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5000.00 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. 

மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8500.00 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000.00 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் 72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5000.00 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5000.00 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு 2000.00 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உறுதிபடுத்தப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதோடு 98.08 சதவீதமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அடுத்தபடியாக கண்டியிலிருந்து 96.05 சத வீகிதமும் , கிளிநொச்சியிலிருந்து 96 சத வீகிதமும், யாழ்ப்பாணத்திலிருந்து 96 சத வீகிதமும் திருகோணமலையிலிருந்து 95.5 சதவீதமான விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 3,362,040 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக என ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.



-வவுனியா தீபன்-


கருத்துகள்