உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவை அதிகரிக்கத் தீர்மானம்

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ஆசிரியர்களிடம் இரண்டாவது முறையாக நேற்று விண்ணப்பங்களை கோருவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை தனியார் பல்கலைகழகங்களை ஒழுங்குபடுத்த தனி நிறுவனத்தை நிறுவவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர்.

15,000 பேர் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர், ஆனால் இரசாயனவியல், பௌதீகவியல், இணைந்த கணிதம் போன்ற பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.

தினசரி மதிப்பீட்டு உதவித் தொகை உயர்த்தப்படாததால், ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை. கொடுப்பனவுகளை அதிகரிக்கும் புதிய தீர்மானத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பார்கள் என பரீட்சை திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


கருத்துகள்