நானுஓயா டெஸ்போட்டில் நண்பர்களுடன் நீராட சென்ற 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞன் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
தனது வீட்டில் சிறிய முரண்பாடு காரணமாக நானுஓயாவில் கிலாரண்டன் பகுதியில் தனது உறவினர் வீட்டில் ஐந்து நாட்களுக்கு மேலாக தங்கி இருந்த நிலையிலே இன்று இவர் நீராட சென்றுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் இளைஞனின் சடலத்தை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக