இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய டேட்டிங் வலைத்தளங்களையும் பயன்படுத்த நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனுஷ்க குணதிலக்கவை, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு நாளாந்தம் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அவருக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முறைப்பாட்டாளர் தரப்பை சந்திப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் 2ம் திகதி 29 வயதான யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டது.

உடலுறவு கொள்வதற்கு தான் அனுமதி வழங்கிய போதிலும், தனது கோரிக்கைகளை நிராகரித்து தனுஷ்க குணதிலக்க தன்னை வலுக்கட்டாயப்படுத்தியதாக முறைப்பாட்டில் குறித்த யுவதி தெரிவித்திருந்தார்.

ஆணுறையை பயன்படுத்துமாறு தான் கோரிய போதிலும், தனுஷ்க குணதிலக்க அதனை நிராகரித்திருந்ததாக யுவதி முறைப்பாடு செய்திருந்தார்.

அதேவேளை, தனது கழுத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் நெறித்ததாகவும் அவர் கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க அந்த நாட்டு பொலிஸாரினால் இந்த மாதம் 6ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சுமார் 11 தினங்களில் பின்னர், தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முதலாம் இணைப்பு

தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல் தடவையாக தனுஷ்க குணதிலக்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் (37154233.98) பிணையில் கீழ், நிபந்தனை அடிப்படையில் தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய யுவதியுடன், தனுஷ்க குணதிலக்க பயணம் செய்த பகுதிகளில் காணப்படும் சிசிடிவி காணொளிகளை பெற்றுக்கொள்வதற்கு அந்த நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி வழங்கியது.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தொடருக்கான அவுஸ்திரேலியா சென்ற தனுஷ்க குணதிலக்க, யுவதியொவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

தன்னை பாலியல் வல்லுறவுக்கு தனுஷ்க குணதிலக்க ஈடுபடுத்தியதாக குறித்த யுவதி, அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னணியில், தனுஷ்க குணதிலக்க இந்த மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.