பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதி

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.

ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்து  பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.

அமைச்சர் டிரான் அலஸ், சட்ட மாஅதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர், அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தனது வருகையின் நினைவாக விசேட பிரமுகர் புத்தகத்திலும் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)


கருத்துகள்