ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 சதவீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டமை தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யுகதனவ் மின் ஆலை தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்த முதலீட்டில் 250 அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என எடுத்துரைத்தார்.
எனினும், அவருடைய பதிலில் பங்காளிகள் திருப்தியடையவில்லை.
அதனால், இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துவிட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஒப்பந்தத்தை சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்றது.
சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச,
கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலை தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ, நாடு திரும்பியதும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
என்றார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருக்கும் பங்காளி கட்சிகளில் 10 கட்சிகளின் தலைவர்கள், மேற்படி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமெழுதி, ஜனாதிபதிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மிரர்
கருத்துரையிடுக