கடற்தொழிலார்களுக்கு மண்ணெண்ணெயினை முறையாகவும், தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிபரின் பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதன்படி, கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடற்றொழிலாளர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை விடுவிக்க கடந்த வாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 206 பவுசர்களே (58%) பெற்றோல் நிலையங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதற்காக அரசாங்கம் 33 இலட்சம் டொலர்கள் மேலதிக செலவீனங்களைச் செய்த போதிலும் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படாததால் கடற்றொழிலாளர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனுப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மக்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக